Showing posts with label ஷிஃபா. Show all posts
Showing posts with label ஷிஃபா. Show all posts

Friday, November 19, 2010

ஷிஃபா மருத்துவமனை கலந்துரையாடல் கூட்டம்

ஏறத்தாழ, சென்ற ஒரு வாரத்திற்கு முன் அறிவிப்புச் செய்யப்பட்டு, இன்று(18/11/2010 – வியாழன்) காலை பத்தரை மணியளவில் ஷிஃபாவின் முதல் மாடியில் பொதுக்குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் நிர்வாகக் குழுத் தலைவர் M.S.T. தாஜுத்தீன் அவர்கள் தலைமையில், பொதுச் செயலாளர் A.J. தாஜுத்தீன் அவர்கள் முன்னிலையில் இக்கூட்டம் தொடங்கிற்று.

தலைவர் தமது முன்னுரையில்,"இந்த மருத்துவமனையின் வரலாற்றிலேயே இது முதலாவது கூட்டமாகும்" என்று அறிவித்து, இக்கூட்டத்தின் முக்கியத்துவத்தை வந்திருந்தோரின் மனங்களில் பதியச் செய்தார். நமதூரும் காயல்பட்டினமும் ஒரே பண்பாட்டைக் கொண்டிருந்தாலும், நம்மைவிட அவர்கள் மருத்துவ வசதிகளில் முன்னோடியாகத் திகழ்கின்றார்கள்; ஆனால், மருத்துவ வசதிகளைத் துவக்கியத்தில் அவர்களைவிட நாம்தான் முந்தியவர்கள் என்பதைக் குறிப்பிட்டு, நாம் செய்ய வேண்டிய பணிகளை முறையாகச் செய்யத் தவறிவிட்டோம் என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

காலாகாலத்தில் அவ்வாறு நாம் மருத்துவ வசதிகளைப் பெருக்கியிருந்தால், அல்லாஹ் உதவியால், பல அகால மரணங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று குறிப்பிட்ட தலைவர், தமது கூற்றுக்குச் சான்றாக, தமக்கு நெருங்கிய சிலரின் மரணத்தைப்பற்றி நினைவுகூர்ந்து வருத்தம் தெரிவித்தார். அத்தகைய நிலைகள் இனிமேல் வரக்கூடாது என்ற கவலை அண்மைக் காலத்தில் இதன் நிர்வாகிகளுக்கும் ஆர்வலர்களுக்கும் ஏற்பட்டதனால்தான் இது போன்ற கலந்துரையாடல்களும் கருத்துக் கணிப்புகளும் அவசியமாகின்றன என்றார்.

ஷிஃபாவை அண்மைக் காலம்வரை நிர்வகிப்பதில் ஏற்பட்ட குறைபாடுகளால் வந்த பின்னடைவை ஒப்புக்கொண்ட தலைவர், இனிமேல் அப்படிப்பட்ட நிலை வரக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டே, நிர்வாகம் ஷிஃபாவை வளர்ச்சிப் பாதையில் நடாத்திச் செல்லவேண்டும் என்பதில் முனைந்துள்ளதாக அறிவித்தார். மருத்துவமனையைத் தொடர்ந்து நடத்துவதில் தொய்வு ஏற்படாதிருக்க, கடந்த சில ஆண்டுகளாக இதன் நிர்வாகிகள் – குறிப்பாக இதன் பொதுச் செயலாளர் A.J. தாஜுத்தீன் அவர்கள் தமது சொந்தப் பணத்தில் கணிசமான தொகைகளைச் செலவு செய்துள்ளதை நன்றியுடன் குறிப்பிட்ட தலைவர், அச்செலவினங்களின் சுருக்கமான விவரத்தையும் வெளியிட்டார்.

இம்மருத்துவமனைக்கு உடனடித் தேவை என்று நிர்வாகிகள் கருதியவற்றைப் பட்டியலிட்ட தலைவர், மகப்பேறு மருத்துவர் (DGO) ஒருவர், குழந்தை மருத்துவர் (DCH) ஒருவர், சிறப்பு மருத்துவர் (MD) ஒருவர் என்று வகைப்படுத்தி, அவர்களுள் மகப்பேறு மருத்துவராகத் திருமதி கோமதி MBBS., DGO அவர்களை மிகச் சிரமப்பட்டு அழைத்து வந்து பணியாற்ற வைத்திருப்பதையும் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் சர்க்கரை நோய், இதயநோய் போன்றவற்றிற்கும் வசதிகள் செய்யப்படும் என்பதற்கு உறுதி கூறினார். நமதூரில் சுமார் எழுபது விழுக்காடு மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை ஆய்வுகள் உண்மைப் படுத்துவதையும், ஆங்காங்கு 'கேன்சர்' போன்ற கொடிய நோய்கள் தலை தூக்கி வருவதையும் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

நமக்கு ஏறத்தாழ மூன்று ஏக்கர் நிலம் உரிமையாகவும், அதில் 1.34 ஏக்கர் அளவில் மட்டுமே மருத்துவமனை அமைந்துள்ளதையும், மீதி நிலம் அரசியல் பின்னணி உடையவர்களால் முடக்கப்பட்டுள்ளதையும் வருத்தத்துடன் குறிப்பிட்டார். அதனை மீட்டெடுக்க முனைப்புடன் வழக்குகளைச் சந்தித்து வருவதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.

தலைமையுரையைத் தொடர்ந்து, பொதுக்குழு உறுப்பினர்களிடையே கருத்துப் பரிமாற்றம் நடந்தது. அதில் கூறப்பட்ட கருத்துகளும், அவற்றிற்கான விளக்கங்களும் வருமாறு:

• வருமானக் குறைவைப் போக்க, ஒரு கம்பெனியைத் தொடங்கலாம். அதன் மூலம் வரும் இலாபத்தில் மருத்துவமனையை நடத்தலாம்.

(நல்ல பரிந்துரை)

• முஸ்லிம் மக்களின் ஜக்காத் பணத்தை வசூலித்து, வசதியற்றோருக்கும் ஏழைகளுக்கும் அதிலிருந்து செலவு செய்து சிகிச்சை அளிக்கலாம்.

(ஜக்காத் பணத்தைப் பயன்படுத்துவதில் சில நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. அதனைச் செலவு செய்வதில் மார்க்க அறிஞர்களின் வழிகாட்டல் அவசியம்.)

• Project Study ஒன்றுக்கு ஏற்பாடு செய்து, சாதக பாதகங்களை ஆய்ந்து, முன்னேற்றப் பாதையில் வழிநடத்த வேண்டும். (ஏற்கனவே இந்த முயற்சியில் ஈடுபட்டு, அதில் ஓரளவு வெற்றியையும் அடைந்துள்ளதைத் தலைவர் குறிப்பிட, இதில் தனது படிப்பறிவையும் பட்டறிவையும் பயன்படுத்தி, நல்ல கருத்துக் கணிப்பையும் அதன் ஆய்வு முடிவையும் தந்துள்ள சகோதரர் மொய்னுத்தீன் அவர்களின் சுருக்கமான விளக்கமும் இக்கூட்டத்தில் இடம்பெற்றது.)

• பொதுமக்கள் டாக்டர்களின் கைராசியைப் பார்க்கிறார்கள். அதனாலும் ஷிஃபாவுக்குக் கூட்டம் வருவதில்லை. (இது போன்ற மனோநிலையில் இருப்பவர்களை நாம் மாற்ற முடியாது.)

• "பொதுமக்களின் இன்றைய trend, மருத்துவத்திற்காகப் பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்குப் போகும் நிலையில் இருப்பதால், நாம் ஏன் ஷிஃபா மருத்துவமனையைப் பட்டுக்கோட்டைக்கு மாற்றக் கூடாது?" என்று ஒருவர் கேட்ட கேள்வி புதுமையாக இருந்தாலும், அதில் உள்ள சிரமங்கள் மற்றவர்களின் மாற்றுக் கருத்துகளுக்கு உட்பட்டு மறுக்கப்பட்டது.

• இந்த மருத்துவமனை ஊரின் மையப் பகுதியில் இருந்திருந்தால், இன்னும் மிகப் பயனுள்ளதாக இருந்திருக்கும்; எனவே, இதன் கிளை ஒன்றை ஊரின் மையப் பகுதியில் தொடங்கலாம்; பெரிய சிகிச்சைகளுக்கு இந்தத் தலைமை இடத்திற்கு வரலாமே என்ற புதுக் கருத்தொன்று முன்மொழியப் பட்டது. இதன் மூலம் மக்களிடையே நம்பிக்கை உருவாகும் என்ற பின்னூட்டமும் தெரிவிக்கப்பட்டது.

• தலைவரின் சஊதிப் பயணத்தின்போது, ஜித்தாவில் அதிரை மக்கள் சுமார் அறுபது பேர் கலந்துகொண்ட கூட்டத்தில், இருபத்தைந்து பேர் பொருளுதவி செய்து, ஷிஃபாவின் பங்குதாரர்களாவதற்குச் சம்மதித்ததைத் தலைவர் இடையில் குறிப்பிட்டார். அவர்களின் முன்னுதாரணத்தைப் பின்பற்றி, "நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!" என்ற கூற்றிற்கு ஒப்ப, ஆர்வமும் வசதியும் உள்ள நல்ல மக்களின் பொருளுதவியையும் வேண்டினார்.

• இறுதியாக, டாக்டர் கோமதி அவர்களின் சுருக்கமான – இதயத்தை ஈர்க்கும் சிற்றுரை அமைந்தது. "நான் வளர்த்த பிள்ளை இந்த ஷிஃபா" என்று அவர் கூறியபோது, நெஞ்சங்கள் நெகிழ்ந்தன. தமது எஞ்சிய காலத்தை இந்த மருத்துவமனைக்காக அர்ப்பணிக்க இருப்பதையும் டாக்டர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மக்களின் தவறான புரிதலையும் வதந்திகள் பரப்புதலையும் களைந்து, ஒரு முன்னேற்றப் பாதையில் ஷிஃபா நடை போடவேண்டும் என்று வாழ்த்தினார்.

கூட்ட முடிவில் நன்றி கூறப்பட்டு, பகல் 12.30 மணிக்கு அமர்வு நிறைவுற்றது.

-- அதிரை அஹ்மது

Tuesday, August 31, 2010

"ஷிஃபா" மருத்துவமனைக்கு மறுமலர்ச்சி

"நான் நோயுற்றால், அதைக் குணப்படுத்துபவன் அல்லாஹ்தான்" (26:80) என்பது, இஸ்லாத்தின் அருள்மறையாம் குர்ஆன், மனிதனை இறை வல்லமை மீது நம்பிக்கை கொள்ளச் செய்து அறிவுறுத்தும் அருள் வாக்காகும்.

ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு. சரியான மருந்தால் சிகிச்சை செய்யும் போது, அல்லாஹ் நாடினால், அந்த நோய் குணமாகும்" (சஹீஹ் முஸ்லிம்) என்பது நபிமொழியாகும்.  இதுவும் இஸ்லாத்தின் இனிய போதனைதான்.

கி.பி.1983 இல் பொதுநல நோக்குடன் தொடங்கப்பெற்றது நமதூரின் 'ஷிஃபா' மருத்துவமனை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.அரசு மருத்துவமனையில் இல்லாத வசதிகளுடன் உருவாயிற்று இந்த 'ஷிஃபா' மருத்துவமனை என்பதும் நாமறிந்ததே.சிறந்த மகப்பேறு பெண் மருத்துவர்கள் இங்கு முழு நேரச் சேவையில் ஈடுபட்டிருந்ததால், சுகப் பிரசவங்கள் பல நிகழ்ந்துள்ளன.  (இக்கட்டுரையாளரின் மூன்று பிள்ளைகள் இம்மருத்துவ மனையில்தான் பிறந்துள்ளனர்.)  

பல அவசர சிகிச்சைகளும் பெற்றுச் சுகமடைந்தவர்களும் நம்மூரில் ஏராளம்.  சிறப்பு மருத்துவர்கள் பலர் இங்கு வருகை தந்து சிகிச்சைகளும் தந்துள்ளனர்.  இவ்வாறு,அரசு சாராத பொது மருத்துவமனையாகவும்,சேவை மனப்பான்மையிலும் இயங்கிவந்த 'ஷிஃபா'வுக்குச் சில ஆண்டுகளாகப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்ற கசப்பான உண்மையை உணரத்தான் வேண்டும். 

அதற்கான காரணங்கள் யாவை என்று ஆராய்வது,இக்கட்டுரையின் நோக்கமன்று.  'நடந்தது நடந்ததாக இருக்கட்டும்; இனி நடக்க வேண்டியது நல்லதாக இருக்கட்டும்' என்ற எண்ணத்தில், நமதூரின் நலனில் அக்கறை கொண்ட சிலர் இம்மருத்துவமனைக்குப் புத்துயிர் அளிக்க முன்வந்துள்ளனர் என்பது ஓர் ஆறுதலான செய்தியாகும்.எமது நட்பிற்குரிய அந்த நல்லுள்ளங்களின் வேண்டுகோளின்படி, நாம் ஒரு First Hand Report எடுப்பதற்காக 'ஷிஃபா'வுக்குச் சென்றோம்.

எமக்கு 'ஷிஃபா'வின் எல்லாப் பகுதிகளும் சுற்றிக் காட்டப்பட்டன.  'மாஷா அல்லாஹ்!'  இதே Infrastructure வேறு ஊர்களில் இருந்தால், இன்றைக்கு இதன் நிலையே வேறாக இருந்திருக்கும்.  எல்லா வசதிகளும் இருந்தும், அதிரையின் மருத்துவச் சேவையில் இந்த 'ஷிஃபா'வுக்கு உரிய இடமில்லாமல் போனதற்கு என்ன காரணம்?  யார் யார் காரணம்?  கேள்விகளால் கவலைதான் கூடிற்று!  இது ஒரு Full-fledged Hospital என்ற தகுதியில்,இதன் மறுமலர்ச்சிக்கான தேவைகள் யாவை என்று ஆராய முயன்றோம். 

அப்போதுதான், இந்த மருத்துவமனைக்காக அண்மையில் பணியமர்வு பெற்ற மகப்பேறு மருத்துவர் டாக்டர் கோமதி MBBS, DGO அவர்கள் 'ஷிஃபா'வுக்குள் இன்முகத்துடன் நுழைந்தார்கள்.  அந்நேரத்தில் அவர்களுக்கு நோயாளி ஒருவரும் இல்லாததால், நமக்கு அவர்களுடன் மனம் விட்டுப் பேசும் வாய்ப்பு கிட்டியது.

டாக்டர் கோமதி அவர்கள் நமதூருக்குப் புதியவர் அல்லர்.  'ஷிஃபா'வில்  சில ஆண்டுகள் பணியாற்றியதன் பின்னர், சஊதி அரேபியா, யமன் போன்ற அரபு நாடுகளில் சில ஆண்டுகள் மருத்துவச் சேவை செய்துவிட்டுத் திரும்பி வந்துள்ளார்கள்.  'ஷிஃபா'வின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்களின் அன்பழைப்பை ஏற்று, இந்த மகப்பேறு மருத்துவர் நமதூருக்கு வந்துள்ளார்கள்.  

டாக்டர் கோமதி அவர்களைத் தற்போதைய 'ஷிஃபா'வின் இயக்குநர்கள் மிகுந்த பொருள் செலவில் வரவழைத்து, இங்குப் பணியில் அமர்த்தியுள்ளார்கள்.  டாக்டர் அவர்களின் பேச்சிலிருந்து, இந்த மருத்துவமனையை முன்னேற்றம் செய்யவேண்டும் என்ற அவரின் நோக்கம் தெரிந்தது.  தலைமை மருத்துவர் என்ற முறையில், டாக்டர் அவர்கள் சில பரிந்துரைகளை முன்வைத்தார்கள்.  அவை முறையாக இதன் இயக்குநர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டுவிட்டன.  டாக்டரின் அயல்நாட்டு அனுபவங்களின் தாக்கம், அவர்களின் பரிந்துரைகளில் வெளிப்பட்டது. 

மொத்தத்தில், 'ஷிஃபா'வுக்கு ஒரு Face-lifting அவசரத் தேவை.  இதனை நாம் மின்னஞ்சல் மூலம் இதன் நலம் விரும்பிகளுக்குத் தெரிவித்துவிட்டோம்.  அவர்களும், இவை இன்றியமையாதவை என்றே உணர்கின்றனர். அதன் அறிகுறி, இப்போதே தென்படுகின்றது.  அதாவது, எம் பரிந்துரைகளுள் சில இப்போதே செயலுருப் பெறத் தொடங்கியுள்ளன.  மருத்துவ உபகரணங்கள் பழுது பார்க்கப்பட்டுப் பயன்பாட்டு நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த MBBS பெண் மருத்துவர் (GP) ஒருவரும் அண்மையில் பணியமர்வு பெற்றுள்ளார்.  உள்ளூர் டாக்டர்களுள், டாக்டர் ஹகீம் MBBS, DA அவர்கள் தொடக்க காலம் முதல் 'ஷிஃபா'வுடன் ஏற்படுத்திக் கொண்ட சேவைத் தொடர்பு பாராட்டத் தக்கதாகும்.

மகப்பேறு சிறப்பு மருத்துவருடன் சில பரிந்துரைகளில் நாமும் ஒத்த கருத்தில் உடன்பட்டோம்.  அவற்றுள் ஒன்று,நன்கு பயிற்சி பெற்ற 'நர்ஸ்'கள் மிகத் தேவை என்பதாகும்.சரியான பணியுடை (Uniform) அணிந்து, முறையாக அவர்கள் சேவை செய்யும்போது,நோயாளிகளுக்கு ஓர் ஆறுதல் உண்டாகின்றது.

குழந்தை நல மருத்துவர் ஒருவரின் தேவை பற்றியும் 'ஷிஃபா'வின் இயக்குநர்களிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  அதற்கு, உடனடியாக, உள்ளூரில் பணிபுரியும் மருத்துவர் ஒருவரை on call basis பயன்படுத்திக்கொள்ளவும் ஏற்பாடு நடைபெறுகின்றது.  தற்போது வருகை தரும் பல் மற்றும் 'ஹோமியோபதி' மருத்துவர்களின் சேவையும் மிகப் பயனுள்ளதாக இருக்கின்றது.

மருத்துமனையின் உள்ளும்புறமும் பல சீர்திருத்தங்களால் மிளிரப் போகின்றன, மிக விரைவில்.  நாம் வழங்கிய பரிந்துரைகளுள், கீழ்க்கண்டவை Long term projects என்ற அடிப்படையில்,'ஷிஃபா'வின் இயக்குநர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன:

*'ஷிஃபா'வின் சுற்றுச் சுவருக்குள், இங்கே பணி புரியும் மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கான வீட்டு வசதி செய்து கொடுத்தல்.
 * புதிய மருத்துவப் பிரிவுகளுக்கான கட்டட வசதி செய்தல்.

 * 'ஷிஃபா'வின் செலவினங்களை ஈடு செய்யப் போதுமான வருமானம் தரும் துறைகளைத் தொடங்குதல்.

 * ஏழைகள் மற்றும் வசதியற்றவர்களின் சிகிச்சைகளுக்காகப் பொறுப்பேற்கும் நல்லுள்ளம் கொண்டவர்களை நியமித்தல்.

* வருகையாளர்களின் வசதிக்காகப் பள்ளிவாசல் கட்டுவது.

 தற்போதைய நிர்வாகிகளாகப் பட்டதாரிகள் இருவர் பணி புரிகின்றனர் என்ற செய்தி, கடந்த கால illiterate நிர்வாகிகளால் நம்பிக்கை இழந்தவர்களுக்கு ஓர் ஆறுதலான செய்தியாகும்.

இந்த மருத்துவமனை தொடங்க இருந்த கால கட்டத்தில்,நமதூரின் தலைவர்களுள் ஒருவர் தொலைநோக்கோடு ஒரு பரிந்துரை செய்தாராம்.  அதாவது, இந்த 'ஷிஃபா' மருத்துவமனையைத் தஞ்சாவூரில் கட்டினால் நல்லதல்லவா?  நம்மூர் மக்கள் வந்து தங்கித் தமக்குப் பிடித்த மருத்துவர்கள் மூலம் சிகிச்சை பெறுவார்களே.அதனால் பல டாக்டர்களின் தொடர்பு ஏற்படுமே என்பதெல்லாம் அப்பெரியவரின் ஆலோசனையாம்.  

ஆனால், நம்மூர் மக்கள் வெளியூர்களுக்குப் போய் சிரமங்களை ஏற்கக் கூடாது; செலவினங்களைக் குறைக்கவேண்டும் என்றெல்லாம் கருத்துக்கொண்டு, எதிர்நீச்சல் போட்டு, மர்ஹூம் AMS முதலியவர்களால் இந்த மருத்துவமனை தொடங்கப் பெற்றதாம்.

அத்தகையோரின் நல்ல நோக்கங்கள் நிறைவேற நாமெல்லாம் பங்களிப்புச் செய்ய வேண்டாமா?  எவ்வாறு பங்களிப்புச் செய்யலாம் என்றும், 'ஷிஃபா'வின் செலவினங்களை ஈடு செய்வதற்கு, இதன் வருமானத்தைப் பெருக்க என்னென்ன வழிகளைப் பின்பற்றலாம் என்றும் கருத்திடுங்களேன், பார்ப்போம்!

ஆக்கம்: அதிரை அஹ்மது