Wednesday, September 29, 2010

அயோத்தி தீர்ப்பையொட்டி லாரிகள் நிறுத்தம்

அயோத்தி தீர்ப்பையொட்டி நாளை தமிழகம் முழுவதும் லாரிகள் இயக்காது என, லாரிகள் உரிமையாளர் சங்கத் தலைவர் நல்லதம்பி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
அயோத்தி தீர்ப்பின் எதிரொலியாக தமிழகத்தில் நாளை லாரிகள் இயங்காது. பாதுகாப்பு கருதியே தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் லாரிகள் இயக்கப்படாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழகத்தில் நாளை பகல் 12 மணி முகல் மறுநாள் காலை 6 மணி வரை லாரிகள் இயக்கப்படாது. சூழ்நிலையைப் பொறுத்து நாளை மறுநாள் லாரிகள் இயக்கப்படுவது பற்றி முடிவெடுக்கப்படும் என்றார்

Tuesday, September 28, 2010

100 நாட்களில் 108 இளைஞர்களை இழந்து நிற்கிறோம்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி இன்று கோவையில் தனியார் பள்ளியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர்,  ‘’காஷ்மீர் பிரச்சனை பற்றி ஜூன் மாதமே மத்திய அரசுக்கு எடுத்துச்சொன்னோம். ஆனால் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தியது.அதனால்தான் கடந்த 100 நாட்களில் 108 இளைஞர்களை இழந்து நிற்கிறோம்.
மத்திய அரசின் காலதாமத நடவடிக்கையினால்தான் இந்த இழப்பு ஏற்பட்டது’’என்று தெரிவித்தார்.

அவர் மேலும்,   ‘’காமன்வெல்த்- அன் காமன்வெல்த்’’ என்று கமெண்ட் அடித்தார்.  தொடர்ந்து,  ‘’காமன்வெல்த்தை பொறுத்தவரை இந்தியாவின் மானம் பறிபோகும் என்பதால்தான் கொஞ்சம் அமைதியாக இருக்கிறோம். 

அதற்காக இதில் நடக்கும் ஊழலையும், லஞ்சத்தையும் தட்டிக்கேட்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
அயோத்தியில் 24ம் தேதி கூறப்படவேண்டிய தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது வேதனை.  உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும்.   தீர்ப்புக்கு பின்னர் எவரும் எந்த வித தீய வழிகளில் ஈடுபடாமல் அமைதி காக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்

Monday, September 20, 2010

ஜம்மு-காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாண ஆயுதப்படைகள் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்; அனைத்து கட்சி கூட்டத்தில் திருமாவளவன் வலியுறுத்தல்


ஜம்மு-காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் புதுடெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்த கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
 
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் நமது மக்களே என்று கூறினார். இது மிகவும் பாராட்டுக்குரியதாகும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மக்களிடையே உள்ள உண்மை நிலவரம் என்ன என்பதைச் சுட்டிக்காட்ட நான் விரும்புகிறேன். அம்மாநிலத்தைச் சேர்ந்த மக்களின் மனநிலை என்ன என்பதை இந்திய அரசு அறிந்துள்ளதா? இல்லையா? என்று எனக்குத் தெரியவில்லை.
 
இந்திய அரசுக்கும் ஜம்மு-காஷ்மீர் குடிமக்களுக்கும் இடையே உள்ள முதன்மையான முரண்பாடு இதுதான் என்று உணர்கிறேன். அம்மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது எனும் கோணத்திலிருந்து இப்பிரச்சினையை இந்திய அரசு அணுக வேண்டும். அவ்வாறு இதனை அணுகா விட்டால் இப்பிரச்சினைக்கு நிலையான தொரு தீர்வை நம்மால் காணவே முடியாது