Tuesday, August 31, 2010

"ஷிஃபா" மருத்துவமனைக்கு மறுமலர்ச்சி

"நான் நோயுற்றால், அதைக் குணப்படுத்துபவன் அல்லாஹ்தான்" (26:80) என்பது, இஸ்லாத்தின் அருள்மறையாம் குர்ஆன், மனிதனை இறை வல்லமை மீது நம்பிக்கை கொள்ளச் செய்து அறிவுறுத்தும் அருள் வாக்காகும்.

ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு. சரியான மருந்தால் சிகிச்சை செய்யும் போது, அல்லாஹ் நாடினால், அந்த நோய் குணமாகும்" (சஹீஹ் முஸ்லிம்) என்பது நபிமொழியாகும்.  இதுவும் இஸ்லாத்தின் இனிய போதனைதான்.

கி.பி.1983 இல் பொதுநல நோக்குடன் தொடங்கப்பெற்றது நமதூரின் 'ஷிஃபா' மருத்துவமனை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.அரசு மருத்துவமனையில் இல்லாத வசதிகளுடன் உருவாயிற்று இந்த 'ஷிஃபா' மருத்துவமனை என்பதும் நாமறிந்ததே.சிறந்த மகப்பேறு பெண் மருத்துவர்கள் இங்கு முழு நேரச் சேவையில் ஈடுபட்டிருந்ததால், சுகப் பிரசவங்கள் பல நிகழ்ந்துள்ளன.  (இக்கட்டுரையாளரின் மூன்று பிள்ளைகள் இம்மருத்துவ மனையில்தான் பிறந்துள்ளனர்.)  

பல அவசர சிகிச்சைகளும் பெற்றுச் சுகமடைந்தவர்களும் நம்மூரில் ஏராளம்.  சிறப்பு மருத்துவர்கள் பலர் இங்கு வருகை தந்து சிகிச்சைகளும் தந்துள்ளனர்.  இவ்வாறு,அரசு சாராத பொது மருத்துவமனையாகவும்,சேவை மனப்பான்மையிலும் இயங்கிவந்த 'ஷிஃபா'வுக்குச் சில ஆண்டுகளாகப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்ற கசப்பான உண்மையை உணரத்தான் வேண்டும். 

அதற்கான காரணங்கள் யாவை என்று ஆராய்வது,இக்கட்டுரையின் நோக்கமன்று.  'நடந்தது நடந்ததாக இருக்கட்டும்; இனி நடக்க வேண்டியது நல்லதாக இருக்கட்டும்' என்ற எண்ணத்தில், நமதூரின் நலனில் அக்கறை கொண்ட சிலர் இம்மருத்துவமனைக்குப் புத்துயிர் அளிக்க முன்வந்துள்ளனர் என்பது ஓர் ஆறுதலான செய்தியாகும்.எமது நட்பிற்குரிய அந்த நல்லுள்ளங்களின் வேண்டுகோளின்படி, நாம் ஒரு First Hand Report எடுப்பதற்காக 'ஷிஃபா'வுக்குச் சென்றோம்.

எமக்கு 'ஷிஃபா'வின் எல்லாப் பகுதிகளும் சுற்றிக் காட்டப்பட்டன.  'மாஷா அல்லாஹ்!'  இதே Infrastructure வேறு ஊர்களில் இருந்தால், இன்றைக்கு இதன் நிலையே வேறாக இருந்திருக்கும்.  எல்லா வசதிகளும் இருந்தும், அதிரையின் மருத்துவச் சேவையில் இந்த 'ஷிஃபா'வுக்கு உரிய இடமில்லாமல் போனதற்கு என்ன காரணம்?  யார் யார் காரணம்?  கேள்விகளால் கவலைதான் கூடிற்று!  இது ஒரு Full-fledged Hospital என்ற தகுதியில்,இதன் மறுமலர்ச்சிக்கான தேவைகள் யாவை என்று ஆராய முயன்றோம். 

அப்போதுதான், இந்த மருத்துவமனைக்காக அண்மையில் பணியமர்வு பெற்ற மகப்பேறு மருத்துவர் டாக்டர் கோமதி MBBS, DGO அவர்கள் 'ஷிஃபா'வுக்குள் இன்முகத்துடன் நுழைந்தார்கள்.  அந்நேரத்தில் அவர்களுக்கு நோயாளி ஒருவரும் இல்லாததால், நமக்கு அவர்களுடன் மனம் விட்டுப் பேசும் வாய்ப்பு கிட்டியது.

டாக்டர் கோமதி அவர்கள் நமதூருக்குப் புதியவர் அல்லர்.  'ஷிஃபா'வில்  சில ஆண்டுகள் பணியாற்றியதன் பின்னர், சஊதி அரேபியா, யமன் போன்ற அரபு நாடுகளில் சில ஆண்டுகள் மருத்துவச் சேவை செய்துவிட்டுத் திரும்பி வந்துள்ளார்கள்.  'ஷிஃபா'வின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்களின் அன்பழைப்பை ஏற்று, இந்த மகப்பேறு மருத்துவர் நமதூருக்கு வந்துள்ளார்கள்.  

டாக்டர் கோமதி அவர்களைத் தற்போதைய 'ஷிஃபா'வின் இயக்குநர்கள் மிகுந்த பொருள் செலவில் வரவழைத்து, இங்குப் பணியில் அமர்த்தியுள்ளார்கள்.  டாக்டர் அவர்களின் பேச்சிலிருந்து, இந்த மருத்துவமனையை முன்னேற்றம் செய்யவேண்டும் என்ற அவரின் நோக்கம் தெரிந்தது.  தலைமை மருத்துவர் என்ற முறையில், டாக்டர் அவர்கள் சில பரிந்துரைகளை முன்வைத்தார்கள்.  அவை முறையாக இதன் இயக்குநர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டுவிட்டன.  டாக்டரின் அயல்நாட்டு அனுபவங்களின் தாக்கம், அவர்களின் பரிந்துரைகளில் வெளிப்பட்டது. 

மொத்தத்தில், 'ஷிஃபா'வுக்கு ஒரு Face-lifting அவசரத் தேவை.  இதனை நாம் மின்னஞ்சல் மூலம் இதன் நலம் விரும்பிகளுக்குத் தெரிவித்துவிட்டோம்.  அவர்களும், இவை இன்றியமையாதவை என்றே உணர்கின்றனர். அதன் அறிகுறி, இப்போதே தென்படுகின்றது.  அதாவது, எம் பரிந்துரைகளுள் சில இப்போதே செயலுருப் பெறத் தொடங்கியுள்ளன.  மருத்துவ உபகரணங்கள் பழுது பார்க்கப்பட்டுப் பயன்பாட்டு நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த MBBS பெண் மருத்துவர் (GP) ஒருவரும் அண்மையில் பணியமர்வு பெற்றுள்ளார்.  உள்ளூர் டாக்டர்களுள், டாக்டர் ஹகீம் MBBS, DA அவர்கள் தொடக்க காலம் முதல் 'ஷிஃபா'வுடன் ஏற்படுத்திக் கொண்ட சேவைத் தொடர்பு பாராட்டத் தக்கதாகும்.

மகப்பேறு சிறப்பு மருத்துவருடன் சில பரிந்துரைகளில் நாமும் ஒத்த கருத்தில் உடன்பட்டோம்.  அவற்றுள் ஒன்று,நன்கு பயிற்சி பெற்ற 'நர்ஸ்'கள் மிகத் தேவை என்பதாகும்.சரியான பணியுடை (Uniform) அணிந்து, முறையாக அவர்கள் சேவை செய்யும்போது,நோயாளிகளுக்கு ஓர் ஆறுதல் உண்டாகின்றது.

குழந்தை நல மருத்துவர் ஒருவரின் தேவை பற்றியும் 'ஷிஃபா'வின் இயக்குநர்களிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  அதற்கு, உடனடியாக, உள்ளூரில் பணிபுரியும் மருத்துவர் ஒருவரை on call basis பயன்படுத்திக்கொள்ளவும் ஏற்பாடு நடைபெறுகின்றது.  தற்போது வருகை தரும் பல் மற்றும் 'ஹோமியோபதி' மருத்துவர்களின் சேவையும் மிகப் பயனுள்ளதாக இருக்கின்றது.

மருத்துமனையின் உள்ளும்புறமும் பல சீர்திருத்தங்களால் மிளிரப் போகின்றன, மிக விரைவில்.  நாம் வழங்கிய பரிந்துரைகளுள், கீழ்க்கண்டவை Long term projects என்ற அடிப்படையில்,'ஷிஃபா'வின் இயக்குநர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன:

*'ஷிஃபா'வின் சுற்றுச் சுவருக்குள், இங்கே பணி புரியும் மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கான வீட்டு வசதி செய்து கொடுத்தல்.
 * புதிய மருத்துவப் பிரிவுகளுக்கான கட்டட வசதி செய்தல்.

 * 'ஷிஃபா'வின் செலவினங்களை ஈடு செய்யப் போதுமான வருமானம் தரும் துறைகளைத் தொடங்குதல்.

 * ஏழைகள் மற்றும் வசதியற்றவர்களின் சிகிச்சைகளுக்காகப் பொறுப்பேற்கும் நல்லுள்ளம் கொண்டவர்களை நியமித்தல்.

* வருகையாளர்களின் வசதிக்காகப் பள்ளிவாசல் கட்டுவது.

 தற்போதைய நிர்வாகிகளாகப் பட்டதாரிகள் இருவர் பணி புரிகின்றனர் என்ற செய்தி, கடந்த கால illiterate நிர்வாகிகளால் நம்பிக்கை இழந்தவர்களுக்கு ஓர் ஆறுதலான செய்தியாகும்.

இந்த மருத்துவமனை தொடங்க இருந்த கால கட்டத்தில்,நமதூரின் தலைவர்களுள் ஒருவர் தொலைநோக்கோடு ஒரு பரிந்துரை செய்தாராம்.  அதாவது, இந்த 'ஷிஃபா' மருத்துவமனையைத் தஞ்சாவூரில் கட்டினால் நல்லதல்லவா?  நம்மூர் மக்கள் வந்து தங்கித் தமக்குப் பிடித்த மருத்துவர்கள் மூலம் சிகிச்சை பெறுவார்களே.அதனால் பல டாக்டர்களின் தொடர்பு ஏற்படுமே என்பதெல்லாம் அப்பெரியவரின் ஆலோசனையாம்.  

ஆனால், நம்மூர் மக்கள் வெளியூர்களுக்குப் போய் சிரமங்களை ஏற்கக் கூடாது; செலவினங்களைக் குறைக்கவேண்டும் என்றெல்லாம் கருத்துக்கொண்டு, எதிர்நீச்சல் போட்டு, மர்ஹூம் AMS முதலியவர்களால் இந்த மருத்துவமனை தொடங்கப் பெற்றதாம்.

அத்தகையோரின் நல்ல நோக்கங்கள் நிறைவேற நாமெல்லாம் பங்களிப்புச் செய்ய வேண்டாமா?  எவ்வாறு பங்களிப்புச் செய்யலாம் என்றும், 'ஷிஃபா'வின் செலவினங்களை ஈடு செய்வதற்கு, இதன் வருமானத்தைப் பெருக்க என்னென்ன வழிகளைப் பின்பற்றலாம் என்றும் கருத்திடுங்களேன், பார்ப்போம்!

ஆக்கம்: அதிரை அஹ்மது

Saturday, August 14, 2010

ஏ.எல்.மெட்ரிகுலேஷன் பள்ளி Vs A Chinese system of exercises


"A sound mind in a sound body is a short but full description of a happy state in the world."                                                                           - John Locke (1632-1704)

"Bodily exercise, when compulsory, does no harm to the body.  But knowledge which is acquired under compulsion obtains no hold on the mind."
                                    - Plato (427 BC-347 BC) in 'The Republic' 

மனித வாழ்க்கையில், மாணவப் பருவம் ஒரு மகத்தான பருவம் என்பதை இன, மொழி, மத வேறுபாடின்றி அனைவரும் ஏற்றுக்கொள்வர்.  இப்பருவத்தில் நாம் பெறும் ஒழுக்கம் அல்லது ஒழுக்கமற்ற பயிற்சிதான் நம் வாழ்க்கை முழுவதும் பிரதிபலிக்கும்.  இதில், அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில விதிவிலக்குகள் இருக்கலாம்.

மேற்காணும் முதல் பழமொழியில் ஜான் லோக்கி கூறுவதுபோல், உறுதியான உடலில் இருக்கும் உறுதியான மன நிலையே இவ்வுலக வாழ்வின் இனிமை நிலைக்குக் கட்டியம் கூறுவதாகும்.  இதையும் விஞ்சி, இரண்டாவது முதுமொழியில், 'The Republic' எனும் புகழ் பெற்ற இலக்கியப் படைப்பின் ஆசான் ப்லேட்டோ குறிப்பாகக் கூறுவது, இளமையில் செய்யவேண்டிய உடற்பயிற்சியின் இன்றியமையாமை பற்றியதாகும்.  இவர் அழகாகச் சொல்கிறார்:  "கட்டாயமாகக் கொடுக்கப்பட்ட உடற்பயிற்சியானது, உடலுக்கு எந்தத் தீங்கும் செய்துவிடாது.  ஆனால், கட்டாயத்தால் பெற்ற கல்வியறிவானது, மனத்துள் நிலைத்திருக்காது."

இன்று பெரும்பாலான கல்விக்கூடங்களில் பயிலும் மாணவ மாணவியர்க்குப் பாட நூல்களென்றும், வழிகாட்டி நூல்களென்றும், வீட்டுப் பாடங்களென்றும், 'ட்யூஷன்' பாடமென்றும், இன்னும் இவை போன்ற சுமைகள் பலவற்றைச் சுமத்தி, அவர்களைக் கல்வியாளர்களும் கல்விக் கூடங்களை நிர்வகிப்பவர்களும் வெறும் 'சுமை தூக்கிகளாக' ஆக்கிவிடுகின்றார்கள் என்று கூறினால் மிகைக் கூற்றாகாது.  இந்நிலையில் சிறிதேனும் மாற்றத்தைச் செய்து, அவர்களுக்குத் தரமான உடற்பயிற்சிகளை வழங்கினால், அறிஞர் ப்லேட்டோ கூறுவது போன்று, உடலுக்குத் தீங்கு விளைக்காத சில உடற்பயிற்சிகளைக் கொடுத்து, ஜான் லோக்கி கூறுவது போன்று, 'A sound mind in a sound body' உடன் எதிர்காலத்தின் இளைய சமுதாயத்தினரைப் பரிணமிக்கச் செய்யலாம்.


இவ்வகையில், நமதூரில் இயங்கும் கல்விக்கூடங்கள் எதிலும் இல்லாத 'குங்ஃபூ' என்ற ஒரு சிறப்பு உடற்பயிற்சியை இளஞ்சிறார்களுக்குக் கொடுக்க நமதூரின் ஏ.எல்.மெட்ரிகுலேஷன் பள்ளி தொடங்கியுள்ளது.  இப்பயிற்சியைச் சோதனை அடிப்படையில், முதலில் 4, 5 வகுப்பு மாணவர்களுக்கு அளிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார், தஞ்சையைச் சேர்ந்த சகோதரர் முபாரக் மாஸ்ட்டர்.


52 வயதாகும் இவருக்கு, இக்கலையில் 35 ஆண்டுகளின் பட்டறிவு உண்டு.  இவர், 'The Best Martial Arts Trainer in Tanjore District' என்ற பாராட்டிற்குச் சொந்தக்காரர்.  இதுவரை நான்கு Black beltகளைப் பெற்றுள்ளார்.  இவரின் ஆண் மக்கள் மூன்று பேரும் தேசிய அளவில் போட்டிகளில் கலந்துகொண்டு 'பிலேக் பெல்ட்டு'களைப் பெற்றவர்களாவர்.  தஞ்சை மாவட்டத்தில் மட்டும் முபாரக் மாஸ்ட்டருக்கு 1500 மாணவர்கள் உள்ளனர்.  சிறார்களுக்கு இந்த 'Martial Arts' கற்றுக் கொடுத்து, ஆண்டு முடிவில் இவரே அவர்களுக்குச் சான்றிதழும் பட்டை (பெல்ட்டு)களும் வழங்குவார்.


ஏ.எல்.மெட்ரிகுலேஷன் பள்ளி இப்பயிற்சியை அறிமுகப்படுத்தியதன் முழுமுதல் நோக்கம், மாணவர் மற்றும் பெற்றோர்களிடம் உள்ள தேவையற்ற அச்சவுணர்வைப் போக்கி, அவர்களைத் துணிவுள்ளவர்களாக, அறிவாற்றல் பெற்றவர்களாக, தம் பொறுப்புகளை உணர்பவர்களாக ஆக்குவதேயாகும்.  வருங்காலத்தில் கிடைக்கும் பெற்றோர்களின் வரவேற்பைப் பொறுத்து, இப்பயிற்சியை மேலும் விரிவாக்கிச் சிறுமியர்க்கும் கொடுக்கத் திட்டமிட்டுள்ளது இப்பள்ளி நிர்வாகம்.  சிறுமியர்க்குச் சில வரைமுறைகளுடன் கொடுக்கப்படும் 'Tai chi' என்ற ஒரு வகைப் பயிற்சியாகும் அது.  ( A Chinese system of exercises consisting sets of very slow and controlled movements. )

மாணவர்களின் பயிற்சி ஆர்வத்தையும், ஆசானின் பயிற்சியையும் கீழ்க்காணும் இணைப்பில் காணுங்கள்!   



தகவல்+புகைப்படம்: அபூபிலால்
 

Wednesday, August 11, 2010

ரமழான் நோன்பின் சிறப்புக்கள்

ரமழானில் அல்லாஹ்வுக்காக, அவனது கூலியை நாடி, உள்ளச்சத்துடன் நோன்பு வைத்தவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன: அவ்விரவுகளில் தொழுதவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அம்மாதத்தின் சிறப்பான "லைலத்துல் கத்ர்" இரவை பெற்றவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்) நவின்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்:புகாரி, முஸ்லிம்

    நோன்பாளி செய்யக் கூடாதவை
    எவன் பொய்யான சொற்களையும், தீய நடத்தையையும், விடவில்லையோ அவன் உண்ணாமல்  பருகாமலிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை. என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி

    நீங்கள் நோன்பு வைத்திருக்கையில் கெட்டப் பேச்சுக்கள் பேசுவதோ கூச்சலிடுவதோ கூடாது. அவனை யாரேனும் ஏசினால், அல்லது அவனுடன் சண்டையிட முற்பட்டால் "நான் நோன்பாளி"  என்று  கூறி விடவும். நபி (ஸல்)  அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி, முஸ்லிம்

    நோன்பின் தற்காலிக சலுகைகள்
    நீங்கள் பயணத்திலோ நோய்வாய்ப் பட்டவர்களாகவோ இருந்தால் வேறொரு நாளில் அதனை நோற்கவேண்டும்.  (அல்குர்ஆன்: 2:185)

     எங்களுக்கு மாதவிடாய் ஏற்படுகையில் (விடுபட்ட) நோன்பை வேறு நாட்களில் நோற்கும்படியும், அதே காலத்தில் விடுபட்ட தொழுகையை வேறு நாட்களில் நிறைவேற்ற கூடாது என்றும் உத்திரவிடப் பட்டிருந்தது. அறிவிப்பவர்: அன்னை ஆயிஸா (ரழி) நூல்:முஸ்லிம்

    அல்லாஹ்வின் தூதரே! பயணத்தில் இருக்கும்போது நோன்பு நோற்க எனக்கு சக்தி உள்ளது. அப்போது நோன்பு  நோற்பது என்மீது குற்றமாகுமா? என்று நான்  கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் இது அல்லாஹ் வழங்கிய சலுகையாகும். எவன் இந்தச் சலுகையைப்  பயன்படுத்துகின்றானோ, அது நல்லது தான்.  நோன்பு நோற்க எவரேனும் விரும்பினால் அதில் குற்றம் ஏதும் இல்லை. அறிவிப்பவர்: ஹம்ஸா இப்னு அம்ரு(ரழி) நூல்:முஸ்லிம்

    நேன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவை
    நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது பலமுறை பல் துலக்கிக் கொண்டிருக்க நான் கண்டுள்ளேன். அறிவிப்பவர்: ஆபிர் இப்னு ரபிஆ (ரழி) நூல்:அபூதாவூது, திர்மிதீ

    நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த போது தாகத்தின் காரணமாகவோ, அல்லது கடும்  வெப்பத் தினாலோ தங்கள் தலைமீது தண்ணீரை ஊற்றிக் கொண்டிருந்ததை அர்ஜ் என்ற இடத்தில் வைத்து நான் பார்த்தேன். அறிவிப்பவர்:மாலிக் (ரழி) நூல்:அபூதாவூது

    நோன்பு நோற்றிருப்பவர் தான் நோன்பாளி என்பதை மறந்த நிலையில் உண்ணவோ பருகவோ  செய்து விட்டால் (நோன்பு முறிந்து விட்டது என்று எண்ண வேண்டாம்) மாறாக அந்த நோன்பையே முழுமைப் படுத்தட்டும், ஏனெனில் அவனை அல்லாஹ் உண்ணவும், பருகவும் செய்திருக்கின்றான்.  நபி (ஸல்) அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்:புகாரி, முஸ்லிம்

    சஹர் செய்தல் 
    நீங்கள் சஹர் செய்யுங்கள்: ஏனெனில் அதில்(அபிவிருத்தி) பரகத் உண்டு. நபி(ஸல்) அறிவிப்பவர்: அனஸ் (ரழி) புகாரி, முஸ்லிம்

    ஒரு ரமழானில் சஹர்  உண்ண என்னை நபி (ஸல்) அவர்கள் அழைத்தனர். பரகத் நிறைந்த உணவு உண்ண வாரும் என்று அப்போது கூறினர். நூல்:அபூதாவுது,நஸ்யீ

    நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் சஹர் உணவு உண்டோம்: அதன் பிறகு பஜ்ரு தொழுகைக்கு நின்றோம். ஸஹர் உணவு உண்டதற்கும் பஜ்ரு தொழுகைக்கும் இடையில் எவ்வளவு நேரமிருந்தது என நான் வினவினேன். அதற்கு அவர் திருக்குர்ஆனின் ஜம்பது வசனங்கள் ஓதுகின்ற அளவு இடைவெளி இருந்தது என விடை பகர்ந்தார்கள். அறிவிப்பவர்: ஜைது பின் தாபித் (ரழி) நூல்: புகாரீ,முஸ்லிம்

    நோன்பு திறப்பது
அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். நோன்பு திறப்பதில் காலதாமதம் செய்யாத வர்கள் தான் எனக்கு விருப்பமான அடியார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) நூல்: அபூதாவூத், இப்னுமாஜ்ஜா

    நீங்கள் நோன்பு திறக்கும்போது பேரீத்தம் பழத்தின் மூலம் நோன்பு திறங்கள்! அது கிடைக்காவிட்டால் தண்ணீர் மூலம் நோன்பு திறங்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரழி) நூல்:திர்மிதீ, அபூதாவூது