Saturday, May 21, 2011

முஸ்லிம்கள் ஓட்டு திமுகவுக்கு வேட்டு

2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பல இடங்களில் நூலிழையில் வெற்றி பெற்றதற்கு தமுமுக மிக முக்கிய காரணமாக இருந்தது. காரணம் 60 முதல் 65 சதவீத முஸ்லிம்களின் வாக்குகளை திமுகவுக்கு விழ, அப்போது தமுமுக களப்பணிகள் காரணமாக இருந்தது.

இம்முறை தமுமுகவின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இருந்ததால், முஸ்லிம்களின் ஓட்டு 70 சதவீதத்திற்கு அதிகமாக அதிமுக அணியின் பக்கம் கொண்டு செல்லப்பட்டது.

பிரபல ஜூனியர் விகடன் வார இதழ், 45 தொகுதிகளில் சிறுபான்மையான வாக்குகள் அதிமுக அணிக்கு சென்றிருக்கலாம் என தேர்தல் முடிந்த பிறகு கருணாநிதி கணித்திருந்ததாக எழுதியிருந்தது. குமுதம் ரிப்போர்டரும் 60 சதவிகித சிறுபான்மையினர் வாக்குகள் இம்முறை அதிமுக கூட்டணிக்குத்தான் விழும் என கணித்திருந்தது.

அது உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக மேலப்பாளையம், அதிராம்பட்டினம், கடையநல்லூர், தென்காசி, கோவை,  திருப்பூர், நாகூர், வாணியம்பாடி, ஆம்பூர், திருச்சி, திருவல்லிக்கேணி, துறைமுகம், லால்பேட்டை, பரங்கிப்பேட்டை, பண்டாரவாடை, காயல்பட்டினம், கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் ‘பூத்’ வாரியாக எடுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் இதை நிரூபிக்கிறது.

ஆக, முஸ்லிம்களின் சமுதாயப் பேரியக்கம் தமுமுக என்பதும், அவர்களின் அரசியல் கட்சியாக மனிதநேய மக்கள் கட்சி உருவெடுத்திருக்கிறது என்பதும் களத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

நமது அரசியல் நிலைபாட்டை சமுதாயம் மீண்டும் அங்கீகரித்திருக்கிறது என்பது மட்டுமல்ல... நாம் கூட்டு சேரும் அணிக்கே நமது முஸ்லிம் வாக்குகள் விழும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே!