Tuesday, June 29, 2010

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும்


கீழே நீங்கள் படிக்க இருக்கும் செய்தி உங்கள் பார்வைக்கு ஏதோ "மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுவது போல்" இருக்கலாம். இது சிட்டுக்குருவிக்கு மட்டுமல்ல மனித இனத்திற்கும் ஒரு அதிர்ச்சி தகவல் தான்.

இன்றைய கால நவீன உலகில் பல புதிய, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் நாளொன்றாக உலக வர்த்தக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு அதை மக்கள் போட்டிப்போட்டுக்கொண்டு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். அதில் ஒன்று தான் கைபேசி/மொபைல் போன்கள். உலக உருண்டை என்னும் ஒரு வீட்டை விரல் நுனி என்னும் சாவி கொண்டு திறந்து விடலாம் என்பது போல் வகைவகையான, வண்ணவண்ண கைபேசிகள் இன்று வந்து விட்டன.

அதை பட்டி தொட்டிகளில் எல்லாம் பாமரனும் பயன்படுத்தச் செய்வதற்காக உள்நாட்டு மற்றும் பன்னாட்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு அதன் சேவையை அறிமுகப்படுத்தி வருகின்றன. அதன் தொலைத்தொடர்பு சேவை தங்குதடையின்றி நகரங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் கிடைக்கச்செய்ய அதன் உயர்ந்த கோபுரங்கள் மூலம் செயற்கைக்கோளிலிருந்து மின்காந்த அலைகளைப்பெற்றுத்தருவதற்காக எல்லா இடங்களிலும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்பந்த அடிப்படையில் (மாதம் ஒரு கனிசமான தொகையை இடத்தின் உரிமையாளருக்கு கொடுக்கும் வகையில்)நிறுவப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் இங்கிலாந்து நாட்டில் உள்ள பறவைகள் பாதுகாப்பு மையம் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நீண்ட ஆய்விற்குப்பிறகு ஒரு அதிர்ச்சியான தகவலை தந்துள்ளது. அது என்னவெனில் உயரமாக நிறுவப்படும் அதிக மின்காந்த (அலை) சக்தி கொண்ட செல்போன் கோபுரங்களால் பறவையினம் மெல்ல,மெல்ல அழிந்து வருவதாகவும் குறிப்பாக சிட்டுக்குருவி இனம் விரைவில் அழிந்து விடும் என்றும் தெரிவித்துள்ளது. அம்மையம் நம் நாட்டில் கேரள மாநிலத்தின் ஒரு பகுதியில் இக்கோபுரங்கள் காரணமாக பறவைகள் இனம் குறிப்பிட்ட அப்பகுதியில் அழிந்து விட்டதாக தெரிவித்துள்ளது. (தகவல்: தினமணி)

இதுபோன்ற உயர்காந்த மின்னலை கொண்ட கோபுரங்களை நிறுவுவதால் வரும் வருமானங்கள் மட்டுமே நம் கண்களுக்கு தெளிவாக தெரிகிறதே தவிர அதனால் வரும் பல விபரீதங்கள் கண்களுக்குத்தெரிவதும் இல்லை. அதை தெரிந்தாலும் பெரிது படுத்த நம் உள்ளம் என்றும் விரும்புவதில்லை.

இன்று மனித இனம் புற்றுநோயின் பல வகைகள் மூலம் சொல்லாத்துயரை அடைந்து அன்றாடம் மடிந்து வரும் இவ்வேளையில் வாயில்லா ஜீவன் சிட்டுக்குருவிக்கு மட்டும் விதிவிலக்கா என்ன? என்று நாம் கேட்கவில்லை அறிவியலின் நவீன கண்டுபிடிப்புகள் கேட்கலாம்.

கடைசி மூச்சு உள்ளவரை எல்லாத்தீங்குகளிலிருந்தும், விபரீதங்களிலிருந்தும், கொடிய நோய்களிலிருந்தும் நம்மையும், பெற்றோர், உற்றார், உறவினர்களையும், சிறார்களையும் நம்முடன்/நம்மைச்சார்ந்து வாழ்ந்துவரும் எத்தனையோ வாயில்லா ஜீவன்களையும் வல்ல ரப்புல் ஆலமீன் காத்தருள வேண்டும் என்று நாமெல்லாம் பிரார்த்திப்போமாக....

மு.செ.மு. நெய்னா முஹம்மது சவுதியிலிருந்து.

No comments:

Post a Comment